மேற்கு ஜேர்மனிய நகரமான ட்ரியரின் பாதசாரிகளுக்கான பகுதியில் கார் ஒன்று நுழைந்து தாறுமாறாக ஓடி பலரை மோதித் தள்ளியதில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 15 பேர் வரை காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த 51 வயதான காரின் ஒட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பயங்கரமானது என ட்ரியர் நகர மேயர் வொல்ஃப்ராம் லீபே விவரித்தார். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிறுமியும் அடங்குவதாகவும் அவா் கூறினார்.
சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சம்பவம் இடம்பெற்ற பகுதியைத் தவிர்க்குமாறு மக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
ட்ரியர் நகரத்தின் ஃப்ளீச்ஸ்ட்ராஸ் பாதசாரிகள் வீதி வழியாக ஒரு காரை வேகமாகச் செலுத்தியதால் பலர் அதனுடன் மோதுண்டனர். பலா் அச்சத்தில் அலறிக்கொண்டு ஓடினர் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இந்த பகுதியில் வழக்கமாக நடத்தப்படும் கிறிஸ்துமஸ் சந்தை இந்த ஆண்டு இரத்து செய்யப்பட்டது, ஆனால் கடைகள் திறந்திருந்தன.
இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த 15 பேரில் சிலருக்கு கடுமையான காயங்கள் இருப்பதாக ட்ரியர் நகர மேயர் வொல்ஃப்ராம் லீபே தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு ல் பேர்லினில் ஒரு கிறிஸ்துமஸ் சந்தையில் ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர் ட்ரக் ஒன்றைக் கடத்தி மக்கள் மீது மோதியதில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டசின் கணக்கானவர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து நான்கு நாட்களுக்குப் பிறகு இத்தாலிய போலிஸாரால் சம்பவத்துடன் தொடர்புடைய தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.